Published : 06 Apr 2021 03:14 AM
Last Updated : 06 Apr 2021 03:14 AM

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் - ஆளுநரின் கடித நகல் கோரி அற்புதம்மாள் வழக்கு : தமிழக அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக ஆளுநரின் விளக்க கடிதத்தின் நகலை தனக்கு வழங்கக் கோரி அற்புதம்மாள் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள பேரறிவாளன் தன்னை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கை கடந்த ஜனவரியில் விசாரித்த நீதிபதிகள், பேரறிவாளன் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவையின் தீர்மானம் மீது தமிழக ஆளுநர் ஒருவாரத்தில் முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.

அந்த வழக்கில் மத்திய அரசின் உள்துறை அமைச்சக துணைச் செயலாளர் முகமது நசீம் கான் கடந்த பிப்ரவரியில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ‘பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவர்தான் முடிவு செய்ய முடியும் என்ற தனது விளக்கத்தை மத்திய அரசுக்கு கடந்த ஜன.25 அன்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டப்பூர்வமாக ஆராயப்பட்டு வரு கிறது' என தெரிவித்திருந்தார்.

அதேசமயம், பேரறிவாளனுக்கு பரோல் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்தாண்டு ஜூலையில் தொடர்ந்த வழக்கு விசாரணையின்போது ‘ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்க ஜெயின் கமிஷனால் அமைக்கப்பட்ட பன்னோக்கு கண்காணிப்பு விசாரணை குழுவின் (எம்டிஎம்ஏ) இறுதி விசாரணைஅறிக்கைக்காக ஆளுநர் காத்திருப்பதால்தான் 7 பேர் விடுதலை தொடர்பாகதமிழக அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது எந்த முடிவும் எடுக்கவில்லை' என ஆளுநர் தரப்பில் தங்களுக்கு கடிதம் மூலமாக விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்து இருந்தது.

இந்த விவகாரத்தில் ஆளுநர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு காரணம், உச்ச நீதிமன்றத்தில் ஒரு காரணம்என மாறுபட்ட கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது ஏற்புடையதல்ல. எனவே, இதுதொடர்பாக தமிழக ஆளுநர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கடித நகலை தனக்கு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார்.

இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்குவந்தது. அப்போது நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x