Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM
கோவையில் முன்னாள் மேயர் கணபதி ப.ராஜ்குமார் வீட்டில் நேற்று வருமானவரித் துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் கணபதி ப.ராஜ்குமார். கோவை அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளரான இவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இந்நிலையில் கோவை கணபதியில் உள்ள அவரது வீட்டில் நேற்று மாலை வருமானவரித் துறையினர், தேர்தல் பறக்கும் படையினர் உள்ளிட்ட அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுக்க பெரிய அளவில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து இந்தசோதனை நடைபெற்றதாக தெரிகிறது. தகவலறிந்து திமுகவினர் திரள வாய்ப்புள்ளது என கருதி, அவரது வீட்டின் முன் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில் பணம் எதுவும் சிக்கவில்லை.
இதுகுறித்து கோவை வடக்கு தொகுதி தேர்தல் பொறுப்பு அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘எங்களுக்குகிடைத்த தகவலின் அடிப்படையில்இந்த சோதனை நடைபெற்றது. பணம் எதுவும் பிடிபடவில்லை” என்றனர். கணபதி ப.ராஜ்குமார் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, “நிச்சயமாக இதில் அதிமுகவினரின் சதி உள்ளது. அதிகாரிகளுக்கு தவறான தகவல் அளித்துள்ளனர்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT