Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM

நடைபாதை ஆக்கிரமிப்பால்உடுமலையில் போக்குவரத்து நெரிசல் :

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் தீர்வு காணப்பட வேண்டிய முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. சமூக நலனுடனும், தொலைநோக்கு பார்வையியுடனும் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, "உடுமலை மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையம் செல்லும் ராஜேந்திரா சாலையில் தினசரி மற்றும் வாராந்திர சந்தையும், நகராட்சி வணிக வளாகமும் அமைந்துள்ளது. அங்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், வியாபாரிகள் வந்து செல்கின்றனர். இதனால், எந்த நேரமும் போக்குவரத்து அதிகமுள்ள பகுதியாக உள்ளது. இச்சாலையில் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, நெடுஞ்சாலைத்துறையால் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன் பின் படிப்படியாக மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள நகராட்சி வணிக வளாக கடைகள் முன்பாக மக்கள் நடந்து செல்ல நடைபாதை வசதி உள்ளது. ஆனால், மக்களின் நடைபாதையையும் ஆக்கிரமித்து, குத்தகைதாரர்கள் பொருட்களை அடுக்கிவைத்து வியாபாரம் செய்கின்றனர்.இதனால் மக்கள் சாலைகளில் நடந்து செல்ல வேண்டியுள்ளது.

சாலையோரங்களில் கார்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் வேறு வழியின்றி ஆபத்தான நிலையில் சாலையின் நடுவே மக்கள் பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதே சாலையின் மறுபுறம் வாடகை லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக நிலவும் இப்பிரச்சினைக்கு நகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "நகராட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் சந்தை மேம்பாட்டுக்காகவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அப்பணிகள் தொடங்கும்போது போக்குவரத்து பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x