Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM

வாக்குச்சாவடிக்கு வழி தெரியாமல் தேர்தல் பணியாளர்கள் தவிப்பு : திருப்போரூரில் ஆட்டோ ஓட்டுநர்கள் உதவி

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டப்பேரவைத் தொகுதியில், வாக்குப்பதிவுக்காக 484 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக, வெளி தொகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அரசுத் துறை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இப்பணியாளர்கள், நேற்றே (திங்கள்கிழமை) வாக்குச்சாவடி மையங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இதனால், தேர்தல் பணியாளர்கள் திருப்போரூருக்கு வந்தனர்.

அவர்கள், தங்களது வாக்குச்சாவடி மையங்களைக் கண்டறிய முடியாமல், சாலையில் செல்லும் நபர்களிடம் முகவரி கேட்டு, அங்கும் இங்கும் அலைந்தனர். இதில், பெண் பணியாளர்களின் நிலை, மிகவும் பரிதாபமாக இருந்தது.

இவ்வாறு முகவரி தெரியாமல் திணறிய தேர்தல் பணியாளர்களுக்கு, அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் முகவரியை விவரித்தும் மற்றும் அங்கு செல்வதற்கான வழியைக் கூறியும் உதவினர். மேலும், சில ஓட்டுநர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கே தேர்தல் பணியாளர்களை அழைத்துச் சென்றனர். ஆட்டோ ஓட்டுநர்களின் இந்த செயல், தேர்தல் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x