Published : 06 Apr 2021 03:16 AM
Last Updated : 06 Apr 2021 03:16 AM

குற்றாலநாத சுவாமி கோயிலில் - சித்திரை விஷு திருவிழா கொடியேற்றம் :

தென்காசி

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் உள்ள குழல் வாய்மொழியம்மன் சமேத குற்றாலநாதர் கோயிலில் பிரசித்தி பெற்ற சித்திரை விஷு திருவிழா நேற்று தொடங்கியது. காலை 5.20 மணிக்கு மேல் கொடியேற்றமும், தொடர்ந்து திருவில ஞ்சி குமாரர் வருகையும் நடைபெற்றது.

மாலையில் வெள்ளிச் சப்பரத்தில் திருவிலஞ்சி குமாரர் மற்றும் சிம்மாசனத்தில் சுவாமி, அம்மன் வீதியுலா நடை பெற்றது. வரும் 8-ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 9-ம் தேதி காலை தேரோட்டம், 11-ம் தேதி காலை 8.30 மணிக்கும், இரவு 7 மணிக்கும் நடராஜருக்கு தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது.

வரும் 12-ம் தேதி சித்திரசபையில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், பச்சை சார்த்தி தாண்டவ தீபாராதனை, 14-ம் தேதி சித்திரை விஷு தீர்த்தவாரி நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும், இலஞ்சி குமாரர், சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலாவும் நடைபெறுகிறது.

பாபநாசம்

இதுபோல் பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபநாச சுவாமி கோயிலில் சித்திரை விஷு திருவிழாவின் தொடக்கமாக நேற்று காலை கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் சுவாமி - அம்பாள் வீதி உலா நடைபெறும். 9-ம் திருவிழாவான வரும் 13-ம் தேதி காலை வி.கே.புரத்தில் தேரோட்டமும், மறுநாள் இரவு 8 மணிக்கு பாபநாசத்தில் தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது. தொடர்ந்து அதிகாலை 1 மணிக்கு திருமணக் கோலத்தில் சுவாமி -அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அகஸ்தியருக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x