Published : 06 Apr 2021 03:16 AM
Last Updated : 06 Apr 2021 03:16 AM
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. ஏப்ரல் 13-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
கோயில் நடை நேற்று அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. திருவனந்தல் பூஜை, சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. கொடிப்பட்டம் எடுத்து 4 ரத வீதிகளில் உலா வந்து கோயிலைச் சேர்ந்ததும், சுவாமி சன்னதி முன் உள்ள கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டது. கொடிமரம், நந்தியம்பெருமான், பலிபீடம் ஆகியவற்றுக்கு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலையில் ஸ்ரீபலிநாதர் அஸ்திர தேவர் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் சுவாமி, அம்பாள் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
வரும் 11ம் தேதி இரவு 7 மணிக்கு நடராஜர் சிவப்பு சார்த்தி சப்பரத்தில் எழுந்தருளல், 11 மணிக்கு வெள்ளை சார்த்தி எழுந்தருளல், 12-ம் தேதி அதிகாலை பச்சை சார்த்தி எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை 4 மணிக்கு பிச்சாடநர் சப்பரத்தில் வீதி உலா, சந்திரசேகரர் பரிவேட்டைக்கு குதிரை வாகனத்தில் புறப்படுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
வரும் 13-ம் தேதி காலை 8 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 14-ம் தேதி தீர்த்தவாரியும், 15-ம் தேதி தெப்பத் திருவிழாவும் நடக்கின்றன.
ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் த.சு.ரோஜாலி சுமதா, செயல் அலுவலர் (பொறுப்பு) த.சிவகலைப்பிரியா மற்றும் பணியாளர்கள், மண்டகப்படி தாரர்கள் செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT