Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM
ஈரோடு: ஈரோட்டில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக ஐந்து பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க, வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்புக் குழுவினர், வீடியோ குழுவினர் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் சென்றால், அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
தேர்தல் நெருங்கும் நிலையில், வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதைத் தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட் பட்ட வளையக்கார விதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் நடைபெறுவதாகக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதுகுறித்து பறக்கும் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பறக்கும் படையினர் சம்பந்தப் பட்ட பகுதிக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது 5 நபர்கள் வாக்காளர் களுக்கு பணம் பட்டுவாடா செய்தது தெரியவந்தது. இதை யடுத்து அந்த ஐந்து நபர்களையும் தேர்தல் பறக்கும் படையினர் பிடித்து சோதனை செய்தனர். இதில் அவர்களிடம் இருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 60 பறிமுதல் செய்யப்பட்டது.
நகர போலீஸார் அவர்கள் ஐவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், அவர்களைக் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT