Published : 05 Apr 2021 03:16 AM
Last Updated : 05 Apr 2021 03:16 AM

கோவில்பட்டியில் ஹாட்ரிக் வெற்றி பெறுவேன் : அமைச்சர் கடம்பூர் ராஜூ நம்பிக்கை

“கோவில்பட்டியில் ஹாட்ரிக் வெற்றி பெறுவேன்” என்று, அமைச்சர் கடம்பூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்தார்.

கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் கடம்பூர் ராஜூ இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தை தனது தேர்தல் அலுவலகத்திலிருந்து தொடங்கினார். திறந்த ஜீப்பில் நின்றவாறு பிரதான சாலை, புதுரோடு, எட்டயபுரம் சாலை, கதிரேசன் கோவில் ரோடு, ஏ.கே.எஸ். தியேட்டர் சாலை வழியாக மீண்டும் தேர்தல் அலுவலகத்தில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: கோவில்பட்டி தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். செய்த சாதனைகளையும், தொகுதி மக்களையும் நம்பி தான் 3-வது முறையாக களமிறங்கி யுள்ளேன். நிச்சயம் தொகுதி மக்கள் என்னை கைவிட மாட்டார்கள் என்று நம்புகிறேன். கண்டிப்பாக ஹாட்ரிக் வெற்றி பெறுவேன். தேர்தலில் வெற்றி பெற்றவுடன் கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படும். கழுகுமலையில் அரசுக் கல்லூரி அமைக்கப்படும். புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாயை சத்துணவுத் திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். கோவில்பட்டியில் தொழில் பூங்கா அமைக்கப்படும். எப்போதும் நான் தான் இந்த மண்ணின் மைந்தன். வெளியூர்க்காரரை நம்பி ஏமாந்துவிடாதீர்கள் என்றார் அவர். நடிகர் சிங்கமுத்து, திரைப்பட இயக்குநர் ரவி மரியா கலந்துகொண்டனர்.

மார்க்சிஸ்ட் வேட்பாளர்

இதேபோல், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் கே.சீனிவாசன் லட்சுமி மில் மேம்பாலத்தில் தனது இறுதிகட்ட பிரச்சாரத்தை தொடங்கினார். அங்கிருந்து ஊர்வலமாக பிரதான சாலை வழியாக காமராஜர் சிலை அருகே தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார். அவருடன் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x