Published : 05 Apr 2021 03:16 AM
Last Updated : 05 Apr 2021 03:16 AM

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் - தேர்தல் முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் : அச்சமின்றி பொதுமக்கள் வாக்களிக்க நடவடிக்கை

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் காட்பாடியில் நடைபெற்றது. அடுத்தபடம்: ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் நடைபெற்றது.

வேலூர்/ராணிப்பேட்டை

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தேர்தல் தொடர்பானமுன்னேற்பாடு பணிகள் குறித்தஆலோசனைக்கூட்டம் ஆட்சியர்கள் தலைமையில் நேற்று நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், தேர்தல் பொது பார்வை யாளர்கள் அலோக் வர்தன், கிரிஜா, அருண் கே.விஜயன், ஜெரோமிக் ஜார்ஜ், செலவின பார்வையாளர் சேத்தன், காவல் சிறப்பு பார்வையாளர் தர்மேந்திரகுமார், காவல் பார்வையாளர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பேசும்போது, ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. நாளை தேர்தல் நடைபெறுவதற் கான ஏற்பாடுகள் சிறப்பாக செய் யப்பட்டுள்ளன.

தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும், பொதுமக்கள் அச்சமின்றி தங்களது வாக்குகளை செலுத்தவும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் தொடர்பான அனைத்து நிகழ்வுகளும் வீடியோ மூலம் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாக்குகளுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வங்கி பணபரிவர்த்தனைகள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வங்கி அதிகாரிகள் சந்தேகத்துக்குரிய வங்கி கணக்குகள் குறித்த அறிக்கையை தினசரி சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சமர்ப்பிக்க வேண்டும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேர்மையான, வெளிப்படையான தேர்தல் நடைபெற அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’என்றார். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் காட்பாடியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நேற்று நடைபெற்றது. இதில், தேர்தல் சிறப்பு பொது பார்வையாளர் அலோக்வர்தன், சிறப்பு காவல் பார்வையாளர் தர்மேந்திரகுமார், முன்னிலையிலும், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையிலும் இக்கூட்டம் நடைபெற்றது.

இதில், தேர்தல் பொது பார்வையாளர்கள், காவல் பார்வையாளர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உட்பட பலர்கலந்து கொண்டனர். இக்கூட்டத் தில், வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதி களில் தேர்தலையொட்டி செய் யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள், பாதுகாப்பு அம்சங்கள், பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆட்சியர் சண்முகசுந்தரம் விவரித்தார்.

அப்போது, ‘‘சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 5 மற்றும் 6-ம் தேதிகளில் எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடை பெறாமல் இருக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’’ என ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், வேலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், தேர்தல் வட்டாட்சியர் ராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x