Published : 04 Apr 2021 03:15 AM
Last Updated : 04 Apr 2021 03:15 AM

ஒடிசா சட்டப்பேரவையில் பாஜக அமளி சபாநாயகர் இருக்கை நோக்கி செருப்பு வீச்சு :

ஒடிசா சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர்கள் நேற்று அமளியில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகர் இருக்கை நோக்கி செருப்புகள், இயர் போன், காகிதங்கள் உள்ளிட்ட பொருட்கள் வீசப்பட்டன.

ஒடிசா சட்டப்பேரவையில் நேற்று, மாநிலத்தில் சுரங்கப் பணி முறைகேடுகள் மற்றும் விவசாயிகள் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ், பாஜக உறுப்பினர்கள் கோரினர். இதற்கு சபாநாயகர் எஸ்.என்.பட்ரோ அனுமதி மறுத்தார். இதனால் அவையில் எழுந்த எதிர்ப்புக்கு மத்தியில், 'ஒடிசா லோக் ஆயுக்தா சட்டத் திருத்த மசோதா' சில நிமிடங்களில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.

இதற்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகர் இருக்கை நோக்கி செருப்புகள், காகிதங்கள், பேனா, குப்பைக்கூடை, இயர் போன் போன்ற பொருட்கள் வீசப்பட்டன. என்றாலும் இப்பொருட்கள் சபாநாயகர் மேஜையை அடையவில்லை. இந்த அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது.

சபாநாயகர் இருக்கை நோக்கி செருப்பு உள்ளிட்ட பொருட்கள் வீசப்பட்டது தொடர்பாக பாஜக உறுப்பினர்கள் பி.சி.சேத்தி, ஜே.என்.மிஸ்ரா, மோகன் மாஜி ஆகியோர் மீது அரசு தலைமை கொறடா பிரமிளா மாலிக் புகார் எழுப்பியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் சட்டம் தனது கடமையை செய்யும் எனவும் சபாநாயகர் என்.எஸ். பட்ரோ அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x