Published : 03 Apr 2021 03:14 AM
Last Updated : 03 Apr 2021 03:14 AM

திமுகவினர் அளித்த புகாரின் பேரில் - கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு :

கோவை

திமுகவினர் அளித்த புகாரின் பேரில் கோவை கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திமுக கோவை மாநகர மேற்கு மாவட்ட சட்டத்துறை மாவட்ட அமைப்பாளராக இருப்பவர் வ.அருள்குமார். இவர் மாவட்ட தேர்தல் அலுவலரான கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரிடம் சில தினங்களுக்கு முன் புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில், கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் ஆர்.கிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவர் மீது அத்தொகுதி அதிமுக வேட்பாளரான ஜி.அருண்குமார் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் சமூக வலைதளங்களில் உண்மைக்குப் புறம்பான மற்றும் நிரூபிக்க இயலாத குற்றச்சாட்டுகளைக் கூறி விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த பதிவுகள் திமுக வேட்பாளருக்கு கண்ணியக் குறைவை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.

இச்செயல் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானதாகும். மேலும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானதாகும். எனவே அதிமுக கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளரை தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக தகுதியிழப்பு செய்து நடவடிக்கை எடுத்து உத்தரவிட வேண்டும், என தெரிவித்திருந்தார்.

புகாரின் பேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி, புகார் தொடர்பாக வேட்பாளர் ஜி.அருண்குமார் மற்றும் அதிமுகவினர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x