Published : 03 Apr 2021 03:14 AM
Last Updated : 03 Apr 2021 03:14 AM

செங்கை மாவட்ட தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு : ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு நேற்று செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர்.

கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி சாம்பல் புதனன்று தொடங்கியது. 40 நாட்கள் தவக்காலத்தை கிறிஸ்தவர்கள் மேற்கொண்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறு நடைபெற்றது. கடந்த திங்கள் முதல் வியாழக்கிழமை வரை மாலையில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. நேற்று புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது. இதில் சிலுவையில் இயேசு அறையப்பட்ட போது அவர் பேசிய 7 வார்த்தைகளை கிறிஸ்தவர்கள் தியானம் செய்தனர்.

புனித வெள்ளியை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயங்கள் கத்தோலிக்க தேவாலயங்கள், அட்வன்ட் திருச்சபை உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் திருப்பலிகள் நடைபெற்றன.

இயேசுபிரான் மரணத்தை நினைவுபடுத்தும் சிலுவைப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. பங்குத் தந்தை சிலுவையை சுமந்து முன்னே செல்ல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பின் தொடர்ந்து சென்றனர். சிலுவைப்பாடு பேரணி முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று இறுதியில் தேவாலயத்தில் நிறைவு பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பாடல்களை பாடியபடி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x