Published : 03 Apr 2021 03:15 AM
Last Updated : 03 Apr 2021 03:15 AM

‘பாஜக- அதிமுகவை தோற்கடிக்க வேண்டும்’ :

திருச்சி: முற்போக்குத் தமிழ்த் தேசிய, மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய மற்றும் சுற்றுச்சூழலிய இயக்கங்களின் நிர்வாகிகளான கொளத்தூர் மணி (திராவிடர் விடுதலைக் கழகம்), பொழிலன் (தமிழக மக்கள் முன்னணி), காளியப்பன் (மக்கள் அதிகாரம்) ஆகியோர் கூட்டாக திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

மக்களின் அடிப்படை உரிமைகளையும் மற்றும் மொழிவழி மாநிலங்களின் அடையாளங்களையும் மத்திய பாஜக அரசு நசுக்கி வருகிறது. தேர்தல் நேரத்தில்கூட மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்களை முன்னெடுப்பதற்கான வழிகள் அடைக்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பாஜக எதிரியாக உள்ள நிலையில், அந்தக் கட்சியை அதிமுக தோளில் சுமந்து நிற்கிறது. பாஜகவின் பினாமி கட்சிகள் போல செயல்படும் நாம் தமிழர் கட்சி, அமமுக, மநீம ஆகியவற்றை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இந்தத் தேர்தலில் சமூக நீதி வெல்ல வேண்டுமா அல்லது சனாதன தர்மம் வெல்ல வேண்டுமா என்பதுதான் முக்கியம். எனவே, இந்தத் தேர்தலில் பாஜக- அதிமுக- பாமக கூட்டணியை மக்கள் தோற்கடிக்க வேண்டும். மேலும், மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, வாக்குகளைச் சிதறடிக்காமல், பாஜகவை முதன்மை எதிரியாக அறிவித்து செயல்பட்டு வரும் கூட்டணிக்கு தங்கள் வாக்கை அளிக்க வேண்டும் என்றனர்.

அப்போது, பாத்திமா பாபு (ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக் குழு), கென்னடி (தமிழ்த்தேச மக்கள் முன்னணி), பாலகிருஷ்ணன் (சுய ஆட்சி இந்தியா), ராஜாபோஸ் ரீகன் (தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு மீனவர் சங்கம்) உட்பட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x