Published : 02 Apr 2021 03:14 AM
Last Updated : 02 Apr 2021 03:14 AM

திருக்குறுங்குடியில் 5 கருட சேவை புறப்பாடு : விடிய விடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் பங்குனி பிரம்மோற்சவ விழாவில் நேற்று முன்தினம் ஐந்து கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

இக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம் கடந்த 27-ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. நேற்று முன் தினம் 5-ம் திருவிழாவில் காலையில் சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெற்றது. பின்னர், அழகிய நம்பிராயர் மற்றும் தேவிமார்களுக்கு திருமஞ்சனம், தீபாராதனை நடைபெற்றது.

அன்று மாலையில் அழகிய நம்பிராயர், வீற்றிருந்த நம்பி, சயன நம்பி, திருப்பாற்கடல் நம்பி, திருமலை நம்பி ஆகிய 5 சந்நிதிகளின் உற்சவர்களும், 5 கருட வாகனங்களில் எழுந்தருளினர். அலங்காரமாகி, தீபாராதனை, தீர்த்த விநியோகம் நடைபெற்றது. இரவு 9 மணியளவில் ஒவ்வொரு எம்பெருமானும் ராயகோபுர வாசல் கடந்து படியேற்ற சேவை நடைபெற்றது. மாடவீதிகள், ரதவீதிகள் வழியாக ஐந்து பெருமாளும் வலம்வந்ததைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். ஏராளமானோர் பரிவட்டம் சார்த்தி, நைவேத்யம் படைத்தனர்.

கருட வாகனங்கள் மேற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி சந்திப்புக்கு வந்ததும், மேற்குநோக்கி திரும்பி வரிசையாக நின்றன.

ஏராளமான பக்தர்கள் திரண்டிருக்க மேற்குதொடர்ச்சி மலைக்கு, பெருமாள் விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்று, மீண்டும் வடக்கு ரதவீதி வழியாக காலை 8 மணியளவில் சுவாமிகள் கோயிலை வந்தடைந்தனர். அங்கு படிகளைதல் சேவை நடைபெற்றது.

நேற்று காலையில் அனைத்து பெருமாளுக்கும் திருமஞ்சன மாகி, அவரவர் சந்நிதிக்கு எழுந்தருளினர். நேற்று இரவு புகழ்பெற்ற பூம்பல்லக்கு சேவை நடைபெற்றது. வரும் 5-ம் தேதி தேரோட்டமும், 6-ம் தேதி தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x