Published : 30 Mar 2021 03:14 AM
Last Updated : 30 Mar 2021 03:14 AM

நீட், புதிய கல்வி கொள்கையில் இருந்து - மாணவர்களை பாதுகாக்க ஆட்சி மாற்றம் அவசியம் : தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே நீட், புதிய கல்விக் கொள்கை பாதிப்புகளில் இருந்து மாணவர்களைப் பாதுகாக்க முடியும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் போராடிக் கொண்டிருக்கும்போது பி.எஸ்.சி. நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கையும் நீட் தேர்வின் மூலம் நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை மட்டும் வைத்துக் கொண்டு தேர்வு நடத்தினால், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் எப்படி நீட் தேர்வை எதிர்கொள்ள முடியும்?

மாநிலப் பட்டியலில் கல்வி

புதிய கல்விக் கொள்கையால் தங்களுக்குப் பணிப் பாதுகாப்பு இருக்காதோ என்ற அச்சம் கல்லூரி பேராசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கல்வியில் மத்திய அரசு தலையிடக்கூடாது. கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வந்தால் மட்டுமே, கல்வித்தரத்தை உயர்த்தி, நீட் தேர்வை நம் அரசுப் பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் தயார்படுத்த முடியும். அரசுப் பள்ளிகளுக்கான தரமான தேவைகளை மாநில அரசு ஆராய வேண்டும்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்ததும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய பாஜக, மாநில அரசுகளால் பாதிக்கப்பட்ட தமிழக மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் உருவாக்கித் தரப்படும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே நீட், புதிய கல்விக் கொள்கை பாதிப்புகளில் இருந்து தமிழக மாணவர்களை பாதுகாக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x