Published : 28 Mar 2021 03:17 AM
Last Updated : 28 Mar 2021 03:17 AM

தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது : தருமபுரியில் பாலகிருஷ்ணன் தகவல்

தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவான அலை வீசி வருகிறது என தருமபுரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டம் அரூர் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் குமார் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

முன்னதாக தருமபுரியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக தேர்தல் களத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவான அலை வீசி வருகிறது. சமையல் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெண்களிடம் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு மண்டலம் உள்ளிட்ட தமிழக பகுதிகளில் உள்ள சிறு,குறு தொழில்கள், நெசவுத் தொழில் ஆகியவை நலிவடைந்துள்ளது. கரோனா சூழலால் தமிழகத்தில் பல லட்சம் இளையோர் வேலை இழந்துள்ளனர்.

தமிழகத்தில் கால்பதிக்க நினைக்கும் பாஜக-வின் எண்ணம் முறியடிக்கப்படும். தமிழகத்தில் அதிமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடையும். பாஜக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அக்கட்சி டெபாசிட் இழக்கும்.

தருமபுரியில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தவும், கல்வி வளர்ச்சிக்கும், நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து சட்டப் பேரவையில் குரல் கொடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x