Published : 27 Mar 2021 03:14 AM
Last Updated : 27 Mar 2021 03:14 AM

அறப்போர் இயக்கத்துக்கு எதிராக - அமைச்சர் வேலுமணி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு தள்ளுபடி :

அறப்போர் இயக்கத்துக்கு எதிராக அமைச்சர் வேலுமணி தொடர்ந்த அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதியும், அறப்போர் இயக்கம் சார்பில் ஜெயராம் வெங்கடேசனும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் சூழலில் இந்த வழக்கை விசாரிப்பது முறையாக இருக்காது என்றும், நிலுவையில் உள்ள இந்த வழக்கை எதிர்மறையாக கருதக் கூடாது என இரு தரப்புக்கும் உத்தரவிட்டு வழக்கை ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.

இந்நிலையில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மீறி இந்த வழக்கு குறித்து சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக அவதூறு பரப்புவதாக அமைச்சர் வேலுமணி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “இந்த வழக்கைஎதிர்மறையாக கருதக் கூடாதுஎன்றுதான் உத்தரவிட்டுள்ளோமேயன்றி, அமைச்சருக்கு எதிரான விஷயமாகவோ அல்லது வழக்கு குறித்து பதிவுகள் வெளியிடவோ கூடாது என உத்தரவிடவில்லை. இந்த வழக்கு அரசியல் நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ளது.

எனவே வழக்கை தள்ளுபடிசெய்கிறோம். இந்த அவமதிப்புவழக்கு அரசியல் காரணங்களுக்காக உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ளதால் அபராதம் விதிக்கப் போகிறோம்” என்றனர். அப்போது அமைச்சர் தரப்பில் இந்த வழக்கில் எந்தவொரு உள்நோக்கமும் இல்லை என தெளிவுபடுத்தப்பட்ட பிறகு அபராதம் விதிக்கவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x