Published : 25 Mar 2021 03:15 AM
Last Updated : 25 Mar 2021 03:15 AM
இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, வேளச்சேரி தொகுதி அதிமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் மீது திருவான்மியூர் போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹஸன் மவுலானா. இவர் கடந்த 21-ம் தேதி, தனது ஆதரவாளர்களுடன் கார்களில் வாக்கு சேகரிப்பதற்காக சென்று கொண்டிருந்தார். திருவான்மியூர் சிக்னல் அருகே சென்றுகொண்டிருந்தபோது, முன்னால் சென்ற ஒரு இருசக்கர வாகனம் மீது கார் உரசியதாக கூறப்படுகிறது. அந்த வழியாக வந்த அதிமுக பிரமுகரான வழக்கறிஞர் ஒருவர் அதை வீடியோ எடுத்துள்ளார். இதைப் பார்த்த ஹஸன் மவுலானாவின் ஆதரவாளர்கள், அந்த வழக்கறிஞரிடம் சென்று இதுகுறித்து கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்த வேளச்சேரி தொகுதி அதிமுக வேட்பாளர் அசோக், தனது ஆதரவாளர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளார்.
அப்போது ஹஸன் மவுலானா தரப்புக்கும், அசோக் தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து திருவான்மியூர் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இருதரப்பினரிடமும் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர். இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து இரு தரப்பினரும் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து அதிமுக வேட்பாளர் அசோக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதும், காங்கிரஸ் வேட்பாளர் ஹஸன் மவுலானா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மவுலானா மீது தாக்குதல் நடத்தியதாகவும், அது தொடர்பாக அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தலைமை தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT