Published : 22 Mar 2021 03:13 AM
Last Updated : 22 Mar 2021 03:13 AM

25 ஆண்டுகள் பணியாற்றிய - சிறைக் காவலர்களுக்கு பதவி உயர்வு தேவை : தமிழக அரசுக்கு கோரிக்கை

சென்னை

சிறைத் துறையில் 25 ஆண்டுகள் பணிபுரிந்த சிறைக் காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசுக்கு சிறைக் காவலர்கள் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறை, 13 மாவட்ட சிறை, 3 மகளிர்சிறை, 3 திறந்தவெளி சிறை, 89 கிளைச் சிறைகளில் 5 ஆயிரம்சிறைக் காவலர் பணிபுரிகின்றனர்.

காவல், தீயணைப்பு, சிறைகள் ஆகிய 3 துறைகளுக்கும் ஒன்றுபோலவே ஆள்தேர்வு நடக்கிறது. ஆனால், காவல் துறையில் 15 ஆண்டுகள் பணியாற்றினால் தலைமைக் காவலர் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. 10 ஆண்டுகள் தலைமைக் காவலராக பணியாற்றியவர்களுக்கு சிறப்பு உதவி ஆய் வாளர் பதவி வழங்கப்படுகிறது.

அதேபோல, 25 ஆண்டுகள் பணியாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு சிறப்பு நிலைய தீயணைப்பு அலுவலர் பதவி உயர்வுவழங்க தமிழக அரசு கடந்த பிப்ரவரி 1-ம் தேதி உத்தரவிட்டுள்ளது.

காவல், தீயணைப்பு துறையினர் பதவி உயர்வு பெற்ற நிலையில், 25 ஆண்டுகள் பணிபுரிந்த சிறைத் துறையினர் மட்டும் தலைமைக் காவலர்களாகவே பணி ஓய்வு பெறுகின்றனர். ஏராளமான உதவிசிறை அலுவலர் பணி இடங்கள் காலியாக இருந்தாலும், தகுதிவாய்ந்த சிறை தலைமைக் காவலர்களைக் கொண்டு நிரப்பப்படாமல் உள்ளது.

முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, 3 துறைகளுக்கும் ஒரே மாதிரியாகவே உத்தரவுகளை வெளியிடுவார். கடந்த ஆண்டு கரோனா உணவுப்படிகூட காவல்,தீயணைப்பு துறைக்கு மட்டுமே வழங்கப்பட்டது. சிறைத் துறைக்கு வழங்கப்படவில்லை.

இந்த ஆண்டு சிறைத் துறையில்பல நிலைகளில் பணிபுரிபவர்களில் 50 பேருக்கு மட்டும் பதவிஉயர்வு வழங்கப்பட்டுள்ளது. பலகாவலர்கள் பணிமாறுதலுக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் 25 ஆண்டு பணி நிறைவு செய்தவர்களுக்கான பதவி உயர்விலும் சிறைத் துறை புறக்கணிக்கப்பட்டுள்ளதால், சிறைக் காவலர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். எனவே காவல், தீயணைப்புத் துறை போல, சிறைத்துறையிலும் 25 ஆண்டுகள் பணியாற்றிய தலைமை காவலர்களுக்கு ‘சிறப்பு உதவி சிறை அலுவலர்’ பதவி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x