Published : 21 Mar 2021 03:14 AM
Last Updated : 21 Mar 2021 03:14 AM

கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்க கட்டிட பணிமுடிப்பு சான்றிதழ் கட்டாயம் : விதிகளை கண்டிப்பாக அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்கும்போது கட்டிட பணிமுடிப்பு சான்றிதழ் கட்டாயம் என்றவிதியைக் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்று டான்ஜெட்கோவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் என்ற அமைப்பின் செயலாளர் கே.கதிர்மதியோன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கில் கூறியிருந்ததாவது:

குடியிருப்புகள், வணிக மற்றும்தொழில் வளாகம் உள்ளிட்ட அனைத்து வகையான கட்டிடங்களைக் கட்டும்போது சிலர் ஒப்புதல்பெறும் வரைபடத்துக்கு மாறாக,விதிகளை மீறி சட்டவிரோதமாக கட்டிடங்களை கட்டுவதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உரிய அனுமதியின்றி, சட்டவிரோதமாக கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதைத் தடுக்கும் வகையில் கட்டிட பணிமுடிப்பு சான்றிதழ்பெறாமல் கட்டிடங்களுக்கு மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்புவழங்கக் கூடாது என 2018-ம்ஆண்டு உத்தரவிட்டிருந்தது

அதன்படி கடந்த 2019-ம் ஆண்டுதமிழக அரசின் நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் ‘தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள்’ உருவாக்கப்பட்டு புதிய கட்டிடங்களுக்கான பணிமுடிப்பு சான்றிதழை சமர்ப்பித்தால் மட்டுமேமின்சாரம், குடிநீ்ர் மற்றும் கழிவுநீர் இணைப்பு வழங்கப்படும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி கட்டிட பணிமுடிப்பு சான்றிதழ் சமர்ப்பித்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும் எனதமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்பகிர்மானக் கழகமும் (டான்ஜெட்கோ) அறிவித்து, அதை செயல்படுத்தியது.

இந்நிலையில், திடீரென கடந்த ஆண்டு அக்டோபரில் டான்ஜெட்கோ இயக்குநர், மின்வாரிய தலைமைப் பொறியாளர்களுக்கு பிறப்பித்த ஒரு சுற்றறிக்கையில், கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்க கட்டிட பணிமுடிப்பு சான்றிதழ் கட்டாயம் கிடையாது என தன்னிச்சையாக விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளார். இது சட்டவிரோதமானது. இதனால் மீண்டும் விதிமீறல்கட்டுமானங்கள் அதிகரிக்கும். எனவே தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி, கட்டிட விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த டான் ஜெட்கோவுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

டான்ஜெட்கோ தரப்பில், குறைந்த மின்னழுத்த இணைப்பை பயன்படுத்தும் சிறிய கடைகள் மற்றும் ஏற்கெனவே உள்ள கட்டிடத்தின் சிறிய பகுதி ஆகியவற்றுக்கு மின்இணைப்பு வழங்கும்போது பணிமுடிப்பு சான்றை கட்டாயப்படுத்த வேண்டாம் என்றும், ஆனால் அவர்கள் சொத்து வரி சான்றை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரியஅனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளகட்டிடங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் சீல் வைத்த உடனேயே அவற்றின் மின்இணைப்பைதுண்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், ‘‘டான்ஜெட்கோ இயக்குநரின் சுற்றறிக்கைக்கு ஏற்கெனவே உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஆனால் தடைவிதிக்கப்பட்ட இடைப்பட்ட நாட்களிலும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்களுக்கு, கட்டிட பணிமுடிப்பு சான்றிதழ் இல்லாமல் மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளது’ என குற்றம்சாட்டப் பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘கட்டிடங்களுக்கு மின்இணைப்பு வழங்கும்போது கட்டிட பணிமுடிப்பு சான்றிதழ் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்என்ற தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளை கண்டிப்பாக அமல்படுத்தவேண்டும்’’ என்று டான்ஜெட்கோவுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x