Published : 21 Mar 2021 03:14 AM
Last Updated : 21 Mar 2021 03:14 AM
‘‘ஊழலில் ஊறிப்போன காங்கிரஸ், திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது’’ என்று மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்ற செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் செல்வராஜ், காரைக்குடி தொகுதி வேட்பாளர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதில், மத்திய அமைச்சர் வி.கே.சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் இந்த தேர்தல் சரித்திரத்தில் முக்கியமான தேர்தல். பாஜக மக்களை மையமாக வைத்து ஆட்சி நடத்தி வருகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றினர். அவரை தொடர்ந்து பழனிசாமி செயல்படுத்தி வருகிறார்.
மத்திய அரசு, மாநில அரசுடன் இணைந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. கடந்த 2014-க்கு முன்பு, தினமும் ஊழல் பற்றிய பேசிக் கொண்டிருந்தீர்கள். அப்போது கொள்கை இல்லாத ஆட்சி நடந்து கொண்டிருந்தது.
மோடி அரசு ஆறரை ஆண்டுகளில் நூறாண்டுகள் பேசும் சாதனைகளை செய்துள்ளது. மத்திய அரசு அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளுக்காக பாடுபடுகிறது. ஏழை விவசாயிகளுக்காக தினமும் சிந்தித்து திட்டங்களை நிறைவேற்றுகிறது. மீண்டும் அதிமுக ஆட்சி தொடர வேண்டும். அதற்கு கூட்டணிக் கட்சிகளுக்கும் பொறுப்பு உள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் நம்பிக்கை
முன்னேற்றம் தொடர வேண்டுமென்றால் மத்திய அரசுடன் இணக்கமான அதிமுக ஆட்சி தொடர வேண்டும். வெளிநாடுகளில் ஏதாவது பிரச்சினை என்றால் நமது நாடு குரல் கொடுக்கும். அதனால் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு தங்களுக்கென்று ஒரு அரசு இருக்கிறது என்ற நம்பிக்கை உள்ளது.ஊழலில் ஊறிப்போன காங்கிரஸ், திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது. காங்கிரஸ்-திமுக ஆட்சிக் காலத்தின்போது இலங்கையில் போர் நடந்தது. அப்போது தமிழர்கள் கொல்லப்பட்டபோது அவர்கள் கவலைப்பட்டது கிடையாது. முதலைக் கண்ணீர் தான் வடித்துக் கொண்டிருந்தனர்.
இவ்வாறு மத்திய அமைச்சர் வி.கே.சிங் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT