Published : 20 Mar 2021 03:14 AM
Last Updated : 20 Mar 2021 03:14 AM

சம்பளத் தொகையைப் பிரிப்பதில் தகராறு - ஆதிவாசி முதியவா் கொலை :

கோத்தகிரி

கோத்தகிரி அருகே உள்ளகுஞ்சப்பனை, மந்தரை கிராமத்தை சேர்ந்த காரமடை என்பவரது மகன் மணி (66). ஆதிவாசி இருளா் இனத்தைச் சோ்ந்த இவருக்குத் திருமணமாகி மசனி (62) என்ற மனைவியும், மணியன் (30), சின்ராசு (26) என்ற 2 மகன்களும், லட்சுமி (35) என்கிற ஒரு மகளும் உள்ளனா்.

இவா் அப்பகுதியைச் சோ்ந்த குழுவினருடன், விசேஷ நிகழ்ச்சிகளுக்குச் சென்று, அங்கு பழங்குடியினா் இசை நிகழ்ச்சி நடத்தி, அதற்கான தொகையைப் பெற்றுகுழுவினருக்கு பிரித்து கொடுப்பது வழக்கம். அதே பகுதியைச் சோ்ந்த நான்கு பேருடன், அரவேனு பகுதியில் இசை நிகழ்ச்சி நடத்திவிட்டு, மாலை தனது குழுவினருடன் மணி வீடு திரும்பியுள்ளாா்.

செல்லும் வழியில் சம்பளத் தொகையைப் பிரிப்பதில், அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. மந்தரை ஆற்றுப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த மணியை, கல்லால் தாக்கி சிலர் கொலை செய்துள்ளனர். பின்னா்,அவர் கட்டியிருந்த வேட்டியைக்கிழித்து, அவரது இடுப்பில் கட்டி, அங்கிருந்த ஒரு மரத்தில் தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு, அங்கிருந்து மர்மநபர்கள் தப்பிச் சென்றுள்ளனா்.

நீண்ட நேரமாகியும் மணி வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனா். அப்போது மரத்தில் சடலமாக மணி தொங்கிகொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலின்பேரில் மணியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கோத்தகிரி போலீஸார் அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x