Published : 19 Mar 2021 03:14 AM
Last Updated : 19 Mar 2021 03:14 AM

கரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பதால் - கிராமசபை கூட்டம் நடத்துவது சரியாக இருக்காது : உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

தமிழகத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கிராமசபை கூட்டங்களை நடத்துவது சரியாக இருக்காது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழகஅரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாடு ஊராட்சி சட்டப்படி ஆண்டுதோறும் ஜன.26-ம் தேதி குடியரசு தினம், மே 1-ம் தேதி உழைப்பாளர் தினம், ஆக.15-ம்தேதி சுதந்திர தினம், அக்.2-ம்தேதி காந்தி ஜெயந்தி ஆகிய 4 நாட்களும் கிராமசபை கூட்டங்களை நடத்த வேண்டும். கரோனாபரவல் காரணமாக கடந்த 2020ஆக.15, அக்.2 ஆகிய தேதி களில் நடக்க வேண்டிய கிராமசபை கூட்டங்களை தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்தும், கிராமசபை கூட்டங்களை மீண்டும் நடத்தக் கோரியும் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச் செயலாளர் ஏ.ஜி.மவுரியா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

தலைமை நீதிபதி சஞ்ஜிப்பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இந்தவழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, ‘‘தமிழகத்தில் கரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. தொற்று முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில் கிராமசபை கூட்டங்களை நடத்துவது சரியாக இருக்காது’’ என்று விளக்கம் அளித்தார்.

இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள் அடுத்த மாதத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x