Published : 18 Mar 2021 03:14 AM
Last Updated : 18 Mar 2021 03:14 AM
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி உறுதி அளித்துள்ளார்.
மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும் மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி நேற்று வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்திலும் குடும்பத்தை பாதுகாக்கும் ஒரு பெண்ணுக்கு மாதந்தோறும் ரூ.500 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படும். எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி குடும்பங்களுக்கு இது இரட்டிப்பாக வழங்கப்படும். இதன்படி அக்குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வீதம் ஆண்டுக்கு ரூ.12,000 கிடைக்கும். பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இத்தொகை வழங்கப்படும்.
இது தவிர ஆண்டுக்கு 5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
ரேஷன் பொருட்கள் விலையின்றி நேரடியாக வீடுகளுக்கே சென்று வழங்கப்படும். மாணவர்கள் 4 சதவீத வட்டியில் ரூ.10 லட்சம் வரை கடன் பெறும் வகையில் ‘மாணவர் கடன் அட்டை’ வழங்கப்படும். இதற்கு அரசு உத்தரவாதம் அளிக்கும். எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் உயர்கல்வி குறித்து இனி கவலைப்பட வேண்டாம்.
இது அரசியலுக்கான தேர்தல் அறிக்கை அல்ல. வளர்ச்சிக்கான தேர்தல் அறிக்கை.
நாங்கள் ஆட்சிக்கு வந்தது முதல் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளோம். எங்கள் பணிக்காக நாங்கள் ஐ.நா. விருதுகளையும் பெற்றுள்ளோம். 100 நாள் வேலை திட்டத்தில் மே.வங்கம் முதலிடத்தில் உள்ளது. வறுமையை 40 சதவீதம் குறைத்துள்ளோம். விவசாயிகளின் வருமானத்தை 3 மடங்காக உயர்த்தியுள்ளோம்.
இவ்வாறு முதல்வர் மம்தா கூறினார்.
மம்தா மீதான நந்திகிராம் தாக்குதல் ஒரு நாடகம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதுகுறித்து மம்தா கூறும்போது, “எதிர்க்கட்சிகளின் விமர்சனம் பற்றி எனக்கு கவலை இல்லை. எஸ்எஸ்கேஎம் மருத்துவர்கள் அனைவரும் பொய் சொல்கிறார்களா? எம்ஆர்ஐ ஸ்கேனும் பொய் சொல்கிறதா?” என கேள்வி எழுப்பினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT