Published : 17 Mar 2021 03:14 AM
Last Updated : 17 Mar 2021 03:14 AM

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஏப்ரலில் இந்தியா வருகை :

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வரும் ஏப்ரல் மாத இறுதியில் இந்தியா வருகை தரவுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜான்சன் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் பதவியேற்றார். பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டது முதலாக ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டனை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது.

இதையடுத்து, பிரிட்டனின் வர்த்தக நடவடிக்கைகளை முடுக்கிவிடும் விதமாக, வளர்ந்த நாடுகளுடன் அந்நாட்டு அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவுக்கு கடந்த ஜனவரி மாதம் போரிஸ் ஜான்சன் வருகை தருவதாக இருந்தார். இந்தியக் குடியரசு தின விழாவில் பங்கேற்றுவிட்டு இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் ஆலோசனை நடத்துவதாக இருந்தது. ஆனால், பிரிட்டனில் உருமாறிய கரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து இந்திய சுற்றுப்பயணத்தை போரிஸ் ஜான்சன் தற்காலிகமாக ரத்து செய்தார்.

இந்நிலையில், வரும் ஏப்ரல்மாத இறுதியில் போரிஸ் ஜான்சன் இந்தியா வரவுள்ளதாக பிரிட்டன் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின்போது இருதரப்பு வர்த்தக உறவுகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் போரிஸ் ஜான்சன் ஆலோசிக்கவுள்ளதாக பிரிட்டன் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x