Published : 17 Mar 2021 03:14 AM
Last Updated : 17 Mar 2021 03:14 AM

கரோனா பாதிப்பு அதிகரிப்பதால் - அனைத்து ரயிலையும் இயக்க உத்தரவிட முடியாது : உயர் நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு

சென்னை

கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் அனைத்து ரயில்களையும் முழுமையாக இயக்க உத்தரவிட முடியாது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

கரோனா தொற்று காரணமாக கடந்தாண்டு மார்ச் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பேருந்து, ரயில் மற்றும் விமான போக்குவரத்தும் படிப்படியாக குறைக்கப்பட்டது. கரோனா தாக்கம் பின்னர் குறைய ஆரம்பித்ததும், ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது அனைத்து ரயில் சேவைகளையும் முழுமையாக இயக்க தெற்கு ரயில்வேக்கு உத்தரவிடக் கோரி திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் பி.ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், பேருந்து மற்றும் விமான போக்குவரத்து 100 சதவீதம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் ரயில் போக்குவரத்து 65 சதவீதமே இயக்கத்தில் உள்ளது.

எனவே ரயில் போக்குவரத்தையும் முழுமையாக இயக்க தெற்கு ரயில்வேக்கு உத்தரவிட வேண்டும். ஏனெனில் பேருந்து கட்டணத்தைவிட ரயில் கட்டணம் குறைவு என்பதால் பொதுமக்களுக்கும் பேருதவியாக இருக்கும், என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் தற்போதைய சூழலில் அனைத்து ரயில்களையும் முழுமையாக இயக்க உத்தரவிட முடியாது என மறுப்பு தெரிவித்தனர்.

தற்போதைய சூழலில் நீதிமன்றங்களை திறக்கும் முடிவைக்கூட திரும்பப் பெற்றுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், ரயில்களை முழுமையாக இயக்குவது தொடர்பாக நிபுணர்களுடன் கலந்தாலோசித்து ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும், தடுப்பூசி போடும் பணி முடிந்தாலோ அல்லது கரோனா பரவல் குறைந்தாலோ மனுதாரர் இதே கோரிக்கையை மீண்டும் எழுப்பலாம் என நீதிபதிகள் அனுமதியளித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x