Published : 16 Mar 2021 03:13 AM
Last Updated : 16 Mar 2021 03:13 AM
திருச்சி விமான நிலையத்தில் முதல்வர் பழனிசாமியிடம், மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ பரமேஸ்வரி முருகன் கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு திருச்சி வந்தனர். அப்போது அவர்களுக்கு அதிமுக வேட்பாளர்கள் கு.ப.கிருஷ்ணன் (ஸ்ரீரங்கம்), மு.பரஞ்ஜோதி (மண்ணச்சநல்லூர்), வெல்லமண்டி என்.நடராஜன் (திருச்சி கிழக்கு), ப.குமார் (திருவெறும்பூர்), த.இந்திராகாந்தி (துறையூர்), வ.பத்மநாதன் (திருச்சி மேற்கு) மற்றும் அமைச்சர் எஸ்.வளர்மதி, மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ பரமமேஸ்வரி முருகன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் சேலம் செல்வதற்காக முதல்வர் பழனிசாமி காரில் ஏறினார். அப்போது அங்கு சென்ற மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ பரமேஸ்வரி முருகன், காரில் இருந்த முதல்வர் பழனிசாமியின் கைகளைப் பற்றிக் கொண்டு கதறி அழுதார். அவரிடம் ஏதோ கூறிய முதல்வர் பழனிசாமி, பின்னர் அங்கிருந்து புறப்பட்டார். இதையடுத்து, கண்ணீரைத் துடைத்தபடி அங்கிருந்து புறப்பட்டார் பரமேஸ்வரி முருகன்.
மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிட மீண்டும் தனக்கு வாய்ப்பு கிடைக்காத ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பரமேஸ்வரி முருகன் கதறி அழுததாக விமானநிலையத்தில் இருந்த அதிமுகவினர் பேசிக் கொண்டனர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT