Published : 16 Mar 2021 03:13 AM
Last Updated : 16 Mar 2021 03:13 AM

ஒரே தொகுதியில் - பாஜக - அதிமுக போட்டி போட்டு மனு தாக்கல் :

புதுச்சேரியில் கடந்த முறை நாராயணசாமிக்காக நெல்லித்தோப்பு தொகுதியை விட்டுத் தந்த ஜான்குமாரும், அவரது மகன் ரிச்சர்டும் பாஜகவில் இணைந்து விட்டனர். இம்முறை இத்தொகுதி காங்கிரஸ்கூட்டணியில் திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இத்தொகுதியை பாஜகவும், அதிமுகவும் கோரிவந்தன. தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில் நேற்று ஜான்குமாரின் மகன் ரிச்சர்ட் பாஜக நிர்வாகிகளுடன் சென்று நெல்லித்தோப்பு தொகுதிக்கு மனுத்தாக்கல் செய்தார்.

அவர் கூறும்போது, “பாஜகவுக்கு தான் நெல்லித்தோப்பு தொகுதி கிடைக்கும். இன்னும் 2 தினங்களில் உறுதியாகிவிடும். நான்தான் பாஜக வேட்பாளர் என்பதை உறுதிப்படுத்தும் படிவத்தை விரைவில் கட்சித் தலைமை அளிக்கும். அதை தாக்கல் செய்வோம்” என்றார்.

இதற்கிடையே முன்னாள் எம்எல்ஏவும், மேற்கு மாநில அதிமுக செயலருமான ஓம்சக்தி சேகர் இதே நெல்லித்தோப்பு தொகுதியில் மனுத் தாக்கல் செய்தார். அப்போது அவர்கூறும்போது, “நெல்லித்தோப்பு தொகுதியில் அதிமுகதான் போட்டியிடுகிறது. புதுச்சேரியில் 5 தொகுதிகள் அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக எங்கள் கட்சித் தலைமை தெரிவித்திருக்கிறது. அதில், நெல்லித்தோப்பும் பெறப்பட்டுள்ளது. அதிமுக தலைமை கடுமையாக போராடி நெல்லித்தோப்பு தொகுதியைப் பெற்றிருக்கிறது. விரைவில் பிரச்சாரத்தை தொடங்குவேன்” என்றார்.

இப்படி ஒரே தொகுதிக்கு ஒரு கூட்டணியில் உள்ள 2 கட்சியினர் மனுத்தாக்கல் செய்துள்ளதால் தேசிய ஜனநாயக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x