Published : 14 Mar 2021 03:14 AM
Last Updated : 14 Mar 2021 03:14 AM
காரைக்குடியில் நடந்தபூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்துக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் வரவில்லை. பல இருக்கைகள் காலியாக இருந்ததைப் பார்த்து கோபம் அடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் காரைக்குடியைத் திருப்பிக் கொடுத்து விடுவோமா என ஆவேசமாக பேசினார்.
காரைக்குடியில் காங்கிரஸ் சார்பில் சாக்கோட்டை கிழக்கு வட்டாரம், கண்டனூர், புதுவயல் பேரூராட்சிகளின் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்துக்கு ப.சிதம்பரம் தலைமை வகித்தார். காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் இக்கூட்டத்துக்கு வரவில்லை. இதனால் கோபம் அடைந்த ப.சிதம்பரம் பேசியதாவது:
காங்கிரஸ் நிர்வாகிகள் இப்படி கூட்டத்துக்கு வராமல் இருந்தால், அடுத்த தேர்தலில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் கூட கிடைக்காது. மேலும் நிர்வாகிகளே வராதபோது ஏன் காரைக்குடியில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும். காரைக்குடி தொகுதியை திருப்பிக் கொடுத்து விடுவோமா?
கிடைக்காத தொகுதி வேண்டும் என்று சண்டை போடுகிறார்கள், வாங்கிய தொகுதியில் கூட்டம் நடத்தினால் நிர்வாகிகள் வருவதில்லை. இதில் தலைமையைக் குறை சொல்வது தவறு. தோழமைக் கட்சிகளை மட்டும் நம்பி தேர்தல் பணி செய்திட முடியுமா? இந்தத் தொகுதியை எதற்காக வாங்கினோம் என்றே தெரியவில்லை.
சிட்டிங் எம்எல்ஏ உள்ள தொகுதி, மக்களவைத் தேர்தலிலும் வென்றுள்ளோம். பொறுப்பாளர்கள் வராத நிலைமையைச் சொன்னால், வேட்பாளர் நிற்காமல் போய்விடுவர். தேர்தலில் உங்களுக்கு (கட்சியினருக்கு) விருப்பம் இல்லையா?
மற்ற கட்சியினர் பிரச்சாரத்துக்கே சென்று விட்டனர். நாம் இன்னும் பூத் கமிட்டி கூட்டம்தான் நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT