Published : 14 Mar 2021 03:14 AM
Last Updated : 14 Mar 2021 03:14 AM
பாலியல் புகாரில் சிக்கிய மூத்த ஐபிஎஸ் அதிகாரி, சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
சிறப்பு டிஜிபியாக இருந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி மீது ஒரு பெண் எஸ்.பி. பாலியல் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து, அந்த ஐபிஎஸ் அதிகாரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவர் மீது பெண் வன் கொடுமை தடுப்பு சட்டம், பெண்ணை மான பங்கப்படுத்துதல், சட்ட விரோதமாக தடுத்து நிறுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிசிஐடி விசாரித்து வருகிறது. விசா ரணை அதிகாரியாக எஸ்.பி. முத்தரசி நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, புகார் கொடுக்க வந்த பெண் எஸ்.பி.யை சுங்கச்சாவடியில் வழிமறித்து இடையூறு செய்ததாக மற்றொரு எஸ்.பி. இடமாற்றம் செய்யப்பட்டு, பின்னர் பணி இடைநீக்கமும் செய்யப்பட்டார். புகாருக்கு உள்ளான ஐபிஎஸ் அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதற்கிடையில், புகாரில் சிக்கிய ஐபிஎஸ் அதிகாரியை நேரில் ஆஜராகுமாறு சிபிசிஐடி சம்மன் அனுப்பியது. இதையடுத்து, சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் அவர் ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வி பிலிப், வழக்கின் விசாரணை அதிகாரி எஸ்.பி. முத்தரசி ஆகியோர் நேரடியாக விசாரணை நடத்தினர்.
‘பணி இடைநீக்கம் செய்யப்பட்ட எஸ்.பி. உட்பட மேலும் சிலரையும் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும்’ என்று சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT