Published : 12 Mar 2021 03:12 AM
Last Updated : 12 Mar 2021 03:12 AM

தமாகா-வுக்கு 6 தொகுதிகள் :

நீண்ட இழுபறிக்கு பின்னர் அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளும், பாஜகவுக்கு 20, என்.ஆர்.தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சி (பெரம்பூர்), ஜான் பாண்டியனின் தமிழ் மக்கள் முன்னேற்ற கழகம் (எழும்பூர்), ஜெகன் மூர்த்தியின் புரட்சி பாரதம் கட்சி (கே.வி.குப்பம்), தர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்ற கழகம் (கும்பகோணம்), பசும்பொன் தேசிய கழகம் (மதுரை மத்தி) ஆகிய 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி நேற்று முன்தினம் ஒதுக்கப்பட்டது. அதன்படி, அதிமுக கூட்டணியில் 9 தொகுதிகள் பங்கீடு செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில், ந.சேதுராமனின் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்துக்கு திருச்சுழி தொகுதி நேற்று ஒதுக்கப்பட்டது. இந்த கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது.

அதிமுக கூட்டணியில் தமாகா 12 தொகுதிகள் கேட்டது. ஆனால், 6 தொகுதிகள் வரை தருவதாக அதிமுக தெரிவித்தது. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் 6 தொகுதிகளுக்கு தமாகா பெற்றுள்ளது. அதன்படி, திரு.வி.க நகர் (தனி), ஈரோடு கிழக்கு, லால்குடி, பட்டுக்கோட்டை, தூத்துக்குடி, கிள்ளியூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

முன்னதாக, லால்குடி தொகுதி அதிமுகவில் டி.ராஜாராமுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த தொகுதியை தமாகா தொடர்ந்து கேட்டு வந்தது. இந்நிலையில், அந்த தொகுதியை அதிமுக திரும்ப பெற்று தமாகாவுக்கு வழங்கியுள்ளது.

இரட்டை இலையில் போட்டி

முன்னதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து உடன்பாட்டில் கையெழுத்திட்டார்.

பின்னர், ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமாக.வுக்கு சைக்கிள் சின்னம்கிடைக்காததால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடஉள்ளது” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x