Published : 11 Mar 2021 03:12 AM
Last Updated : 11 Mar 2021 03:12 AM

பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை வழக்கில் - சிபிஐ விசாரணை தேவையில்லை : உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக விசாகா குழு தனியாக விசாரித்து வருவதால் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக அந்த பெண் எஸ்பி ஒருவர் தமிழக டிஜிபியிடம் புகார் அளித்தார். இதுதொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் எனக்கோரி ஓய்வுபெற்ற கூடுதல் எஸ்பி கே.ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

50 சாட்சிகள்

இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி கூறியதாவது:

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்காக எடுத்ததுடன் விசாரணையை கண்காணிக்கும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

விசாகா குழுவும் விசாரித்து வருகிறது. தவிர சிபிசிஐடி போலீஸார் இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 50 சாட்சிகளிடம் விசாரித்துள்ளனர். அதற்கான வீடியோ ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை சரியானபடி நடந்து வருகிறது. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு வாதிட்டார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.வீரராகவன் கூறும்போது, ‘தொடர்புடைய மூத்த ஐபிஎஸ் அதிகாரி மீது ஏற்கெனவே இதேபோன்ற பாலியல் குற்றச்சாட்டின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் அவர் அதே தவறை செய்துள்ளார்.

எனவே அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். ஏனெனில் அவரது மனைவியும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்பதால் சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை முறையாக நடக்காது. இதில் பல்வேறு குறுக்கீடுகள் இருக்கும்’ என்றார்.

அப்போது மூத்த ஐபிஎஸ் அதிகாரிக்காக ஆஜரான வழக்கறிஞர் அப்துல்சலீம், "இந்த வழக்கில் தொடர்புடைய யார் குறித்தும் எந்த விவாதமும் நடத்தக்கூடாது, அரசியலாக்கக் கூடாது என தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் அதையும் மீறி சிலர் செயல்பட்டு வருகின்றனர்" என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் ஒரு கட்டத்துக்கு மேல் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. உயர் நீதிமன்ற தனி நீதிபதி பரிந்துரைப்படி, இந்த வழக்கு விசாரணை இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது' எனக்கூறி, தற்போது சிபிஐ விசாரணை கோரும் வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x