Published : 10 Mar 2021 03:11 AM
Last Updated : 10 Mar 2021 03:11 AM

சமக, ஜ.ஜே.கே.யுடன் தொகுதி பங்கீடு உடன்பாடு - மக்கள் நீதி மய்யத்துடன் மேலும் பலர் இணைவார்கள் : கமல்ஹாசன் தகவல்

சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சியுடனான தொகுதி பங்கீடு உடன்பாடு ஒப்பந்தத்தில் கமல்ஹாசன் நேற்று கையெழுத்திட்டார். மேலும், மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு பலரும் வருவார்கள் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பேரவைத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி இணைந்து கூட்டணியை உருவாக்கின. இதனை தொடர்ந்து, சமக தலைவர் சரத்குமார், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து இணைந்து செயல்பட அழைப்பு விடுத்தனர். தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட உடன்பாட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி 154 தொகுதிகள், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை தலா 40 தொகுதிகளில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார், அவரது மனைவி ராதிகா, இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் நேற்று மாலை 4 மணியளவில் வந்தனர். சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தலா 40 தொகுதிகளுக்கான ஒப்பந்தத்தில் கமல்ஹாசன் கையெழுத்திட்டார்.

பின்னர், கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கூட்டணி பற்றிய கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. இனியும் வந்த வண்ணம் இருக்கின்றனர். பலரும் வருவார்கள். அவர்கள் அனைவரையும் அரவணைக்கும் கடமை எனக்கு இருக்கிறது. எங்களுடைய கூட்டணி முதல் அணி என்று அழைக்கப்படும். முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு கமல்ஹாசன் அளித்த பதில்:

தேமுதிக உங்களுடைய கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?

யார் வந்தாலும் அவர்களை அரவணைக்க வேண்டியது எங்கள் கடமை. இது மக்களுக்காக வந்திருக்கும் முன்னணி. நல்லது பயக்கும் என்று நினைக்கும் அனைவரையுமே நண்பர்களாக பாவிப்போம்.

தேமுதிகவை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளீர்களா?

கட்சியின் துணை தலைவர் பொன்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பு அப்படியே இருக்கிறது. அவர்கள் முடிவு எடுத்து சொல்வார்கள்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது சமீப காலமாக கடுமையான விமர்சனம் வைக்க என்ன காரணம்?

இங்கு அகற்றப்பட வேண்டியவர்கள் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தான். எனவே, அவர்களை பற்றி பேசாமல் இருக்க முடியாது.

தலா 40 இடங்கள் கூட்டணி கட்சிக்கு கொடுத்துவிட்டீர்கள், புதிதாக வருபவர்களுக்கு எப்படி இடங்களை ஒதுக்குவீர்கள்?

கூட்டணி என்றால் ஒன்றாக வருவதை எதிர்கொள்வது தான். நல்லவர்கள், விருந்தாளிகள், உறவினர்கள், நண்பர்கள் என இனி யார் வந்தாலும் இனி எங்கள் பொறுப்பு. இவ்வாறு அவர் கூறினார்.

சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த கூட்டணியின் தலைவர் மட்டுமல்ல முதல்வர் வேட்பாளரும் கமல்ஹாசன் தான் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறோம். நல்லவர்களையும், வல்லவர்களையும் கமல்ஹாசன் தொடர்ந்து வரவேற்பார்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x