Published : 10 Mar 2021 03:11 AM
Last Updated : 10 Mar 2021 03:11 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து - 2-ம் நாளாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி : இரு அவைகளும் முடங்கியது

புதுடெல்லி

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளிலேயே பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்கக் கோரி மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சி களின் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக மாநிலங்களவை காலையிலும் மக்களவை மாலையிலும் கூடியது. இந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு இரு அவைகளும் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கின.

மக்களவை கூடியதும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்கக் கோரி கோஷமிட்டனர். இதைத் தொடர்ந்து மதியம் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இதன்பின் அவை கூடியபோது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோது தொடர்ந்து அமளி நீடித்ததால் நாள் முழுவதும் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

ஆளும் கட்சிக்கே முக்கியத்துவம்

முன்னதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறும்போது, "நாடாளுமன்ற ஒளிபரப்பில் எதிர்க்கட்சிகள் புறக் கணிக்கப்படுகின்றன. ஆளும் கட்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது" என்று குற்றம் சாட்டினார்.

மாநிலங்களவையில் காங்கிரஸ், திமுக, பகுஜன்சமாஜ், இடதுசாரிகள், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்சினையை எழுப்பின.அவையை நடத்த முடியாததால்அடுத்தடுத்து ஒத்திவைக்கப் பட்டது.

இறுதியில் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளியால் இருஅவைகளும் நேற்று முடங்கின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x