Published : 09 Mar 2021 03:11 AM
Last Updated : 09 Mar 2021 03:11 AM

வாக்காளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தாத வகையில் - வேட்பாளர்களுக்கு தனித்துவமான சின்னம் : தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

வாக்காளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தாத, எளிதில் வேறுபடுத்தி காணும் வகையில் தனித்துவமான சின்னங்களை வேட்பாளர்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது:

எங்களது கட்சி கடந்த 1997-ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட கட்சி. உள்ளாட்சி, சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறது. தேர்தல்ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத, பதிவு செய்யப்பட்ட எங்களது கட்சிக்கு கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலிலும், 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் தொலைக்காட்சி சின்னம் ஒதுக்கப்பட்டது.

ஒரே மாதிரி தோற்றம்

தற்போது நடக்கவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் எங்களது கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது. எனவே, எங்கள் கட்சிக்கு பொது சின்னமான தொலைக்காட்சி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், தொலைக்காட்சி சின்னம்போல இருக்கும் கரும்பலகை, குளிர்சாதனப் பெட்டி, எழுது பலகை, தீப்பெட்டி போன்ற சின்னங்களால் வாக்காளர்கள் குழப்பமடையும் நிலை உள்ளது. எனவே, தொலைக்காட்சி சின்னம்போல ஒரே மாதிரியான தோற்றமுடைய சின்னங்களை பொது சின்ன பட்டியலில் இருந்து நீக்கவும்தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதிசஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘வாக்காளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தாத, எளிதில் வேறுபடுத்தி காணும் வகையில் வேட்பாளர்களுக்கு தனித்துவமான சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்க வேண்டும்’’ என அறிவுறுத் தினர்.

தொலைக்காட்சி சின்னம் கோரும் மனுதாரரின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஒரு வாரத்துக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x