Published : 08 Mar 2021 03:58 AM
Last Updated : 08 Mar 2021 03:58 AM

வாணியம்பாடியில் குடிநீர் கேட்டு - காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல் : காவல் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை

வாணியம்பாடியில் சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி காலிக் குடங் களுடன் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணி யம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட 30-வது வார்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வழங்க வலியுறுத்தி காலிக் குடங்களுடன் அங்குள்ள பிரதான சாலையில் நேற்று திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட மில்லத் நகர் பகுதியில் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. எங்கள் பகுதி மேடாக இருப்பதால் குழாய் மூலம் குடிநீர் சரிவர கிடைப்பதில்லை.

இருப்பினும், நகராட்சி சார்பில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. அந்த குடிநீரும் கடந்த 2 மாதங்களாக வழங்கவில்லை. எங்கள் பகுதி மக்களுக்காக அமைக்கப்பட்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தத்தேக்க தொட்டி சிதிலமடைந்து பல ஆண்டுகள் ஆகிறது. குடிநீர் தேக்கத்தொட்டி மேற்கூரை இல்லாததால் தொட்டி முழுவதும் அசுத்தமாக உள்ளது.

இதை சுத்தம் செய்து குடிநீரை விநியோகம் செய்ய வேண்டும் என நகராட்சி அலுவலகத்தில் பல முறை மனு அளித்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. அசுத்தம் நிறைந்த தொட்டியில் குடிநீரை ஏற்றி அப்படியே விநியோகிப்பதால் சுகாதாரமற்ற குடிநீர் எங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நகராட்சி சார்பில் வழங்கப்பட்டு வந்த குடிநீரும் சரிவர வழங்கப்படாததால் கடந்த 2 மாதங்களாக குடிநீர் இன்றி தவிக்கிறோம். கோடைகாலம் வந்துவிட்டதால் விரைந்து குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டு வருகின்றோம்’’ என்றனர்.

இதைத்தொடர்ந்து, வாணியம் பாடி நகர காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையேற்ற பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x