Published : 07 Mar 2021 03:14 AM
Last Updated : 07 Mar 2021 03:14 AM
ஷினாகோ பிளான்டேஷன் நிறுவனம், ரூ.325 கோடி சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக அதன் நிர்வாகிகள் 2 பேரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை, திருச்சியில் ஷினாகோ பிளான்டேஷன் என்ற தனியார் நிறுவனம் உள்ளது. பயிர்களை வளர்ப்பது, சந்தைப்படுத்துதல், தோட்டக்கலை போன்ற பணிகளை இந்த நிறுவனம் செய்து வருகிறது.
இந்த நிறுவனம் கார்ப்பரேஷன் வங்கியில் (தற்போது யூனியன் வங்கி) சொத்து ஆவணங்களை அடமானமாக வைத்து கடன்வாங்கியிருந்தது. வங்கியில் இருந்து ரூ.325 கோடியை கடனாகப் பெற்ற இந்நிறுவனம், சுமார் 20 வங்கிக் கணக்குகளுக்கு அந்த பணத்தை மாற்றியுள்ளது.
கடனாக பெறப்பட்ட பணம், நிறுவனத்துடன் தொடர்பில்லாத பிற நிறுவனங்களின் வங்கிக்கணக்குகளுக்கு சட்டவிரோதமாக மாற்றப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சட்ட விரோத பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது உறுதிசெய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, ஷினாகோ நிறுவனத்தின் இயக்குநர்கள் ஹித்தேஷ் பட்டேல், சுரேஷ் பட்டேல் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT