Published : 07 Mar 2021 03:15 AM
Last Updated : 07 Mar 2021 03:15 AM
கடந்த சில மாதங்களாக கடலூர் மாவட்டத்தில் கிராமப் பகுதிகளில் இயற்கை சார் வேளாண் கருத்தரங்கு, பாரம்பரிய நெல் திருவிழா, இயற்கை சாகுபடி பயிற்சிகள் களை கட்டி வருகின்றன.
நம்மாழ்வார் வழி செல்லும் இயற்கை வேளாண் ஆர்வலர்கள் இதை முன்நின்று செய்கின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி கிராமத்தில் உள்ள தீப்பாய்ந்த நாச்சியார் கோயிலில் பாரம்பரிய விவசாயிகளின் மரபியல் விழா அண்மையில் நடைபெற்றது.
பாரம்பரிய நெல் விவசாயிகள் பங்கேற்று, இயற்கை சார் விவசாயத்தின் நன்மைகளை எடுத்துரைத்தனர். வேதிப் பொருட்கள் கலப்பில்லாத, நஞ்சில்லாத விவசாயம் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம், அதனால் விளையும் பொருட்களின் தன்மை, ரசாயன உரங்களாலும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நிகழ்வில் பேசப்பட்டது.
இந்நிகழ்வில் பேசிய அனைவரும், விவசாயிகள் படிப்படியாக இயற்கை சார் வேளாண்மைக்கு மாற வேண்டும். இதன்மூலம் மண்ணில் படிந்துள்ள நஞ்சு அகற்றப்பட்டு சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் இயற்கை உணவு பாதுகாப்பானது என்பதை வலியுறுத்தும் வகையில் பாரம்பரிய அரிசி வகைகளில் செய்யப்பட்ட உணவுகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. கருப்பு கவுனி, குள்ளக்கார், கிச்சிலி சம்பா, சீரக சம்பா, காட்டு யானம் என பல்வகை அரிசிகள், அதன் மருத்துவப் பயன்கள் குறிப்பிடப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது,
இயற்கை சார் வேளாண்மையோடு நவீன உழவுக் கருவிகளை பயன்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். அதை உணர்த்தும் வகையிலும் புதிய வேளாண் கருவிகளும் இடம் பெற்றிருந்தன.
இவ்விழாவில் சுற்று வட்டார கிராமத்தினர் பங்கேற்றனர். விழாவின் இரண்டாம் நாளில் பாரம்பரிய கலையான சிலம்பாட்டம், சுருள் வாள் சுற்றுதல், தீப்பந்தம் சுற்றுதல், தண்ணீர் குவளை சுற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் விளையாடப்பட்டன.
விவசாயிகள் படிப்படியாக இயற்கை சார் வேளாண்மைக்கு மாற வேண்டும். இதன்மூலம் மண்ணில் படிந்துள்ள நஞ்சு அகற்றப்பட்டு சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT