Published : 06 Mar 2021 03:13 AM
Last Updated : 06 Mar 2021 03:13 AM

பாலியல் புகாருக்கு ஆளான - காவல் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் : தேர்தல் ஆணையத்துக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை

பாலியல் புகாருக்கு ஆளான காவல்துறை உயர் அதிகாரிகளை கைது செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காவல்துறை உயர் அதிகாரியால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் எஸ்பி.க்கே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. கொலை மிரட்டலைப் பார்த்து கொந்தளித்த பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேர், தமிழக காவல்துறை தலைவரை சந்தித்து புகார் அளித்த பிறகும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காப்பாற்றப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது.

பெண் எஸ்.பி.க்கே கொலை மிரட்டல் விடும் அளவுக்கு அடாவடித்தனத்தில் ஈடுபடும் 2 காவல்உயர் அதிகாரிகளை தற்காலிக பணிநீக்கம் செய்யாதது ஏன் என்பது தெரியவில்லை. புகார் அளித்து 13 நாட்கள் கடந்துவிட்டன. திமுகவும், பெண்கள் அமைப்புகளும் போராட்டம் நடத்திய பிறகே 2 காவல் அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், அவர்கள் இருவரும்இடைநீக்கமும் செய்யப்படவில்லை; கைதும் செய்யப்படவில்லை.

சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனதமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் ஏற்கெனவே வலியுறுத்திவிட்டது. பரனூர் சுங்கச்சாவடியில் அத்துமீறி பெண் எஸ்பி. மறிக்கப்பட்டது குறித்து விளக்கம் கேட்டு உள்துறைச் செயலாளருக்கும், தமிழக டிஜிபிக்கும் மனித உரிமைஆணையம் நோட்டீஸ் அனுப்பிவிட்டது. 10 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபியை சந்தித்து, பெண் எஸ்பி.க்கு கொலை மிரட்டல் விடுத்தது குறித்து புகாரும் அளித்து விட்டனர்.

பெண் எஸ்பியின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக உள்ள இரு காவல் துறை அதிகாரிகளை கைது செய்ய தலைமைச் செயலாளரும், உள்துறை செயலாளரும் உத்தரவிட வேண்டும். ஒருவேளை அவர்கள் தாமதித்தால் தேர்தல் ஆணையமே நேரடியாக தலையிட்டு இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x