Published : 06 Mar 2021 03:14 AM
Last Updated : 06 Mar 2021 03:14 AM

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் - சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பசுமை தொட்டிகள் அமைப்பு :

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பசுமைத் தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நீடித்த சுற்றுச்சூழலுக்கு உகந்த வசதிகளை ஏற்படுத்தித் தருவதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களின் நடைமேடை நிழற்பகுதியில் அதிக அளவு பிராணவாயுவை வெளியிடவும் மெட்ரோ நிலையங்களின் அழகான தோற்றத்துக்கு உயிரூட்டவும் சியோபைட்ஸ் வகைத் தாவரங்களைக் கொண்ட பசுமைத் தொட்டிகளை அமைக்க முடிவு செய்துள்ளது.

அதன் முன்னோட்டமாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருளால் தயாரிக்கப்பட்ட பசுமைத் தொட்டிகள் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மணலால் நிரப்பப்பட்ட தட்டுகளில் இந்த பசுமைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் உபரிநீர் இதில் சேகரிக்கப்பட்டு, நடைமேடையில் தண்ணீர் சிந்தாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது.

ரெபிக்ஸ் எக்சல்சா பென்டானஸ், ஷெப்பிளரா வேரிகேட்டட் (குட்டை குடைத் தாவரம்) போன்ற அழகான உள்தாவரங்கள் மற்றும் செடிகள், பசுமைத் தொட்டிகளில் நடப்பட்டுள்ளன. மெட்ரோ நிலையங்களில் உள்ள வெளிக்காற்று இதனால் உறிஞ்சப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது.

மேலும் நீடித்த சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் பசுமைப் பகுதி, திட்ட செயல்பாட்டுப் பகுதியில் அதிக அளவு இருக்கும் வகையில், ஒரு சுற்றுச்சூழல் துடிவினைப் பிரிவு போன்ற பல்வேறு புத்தாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இது மாசுவைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் சுற்றுச்சூழல் பாதிப்பையும் குறைக்கிறது. கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் இதை செயல்படுத்துவதற்காக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பிரதீப் யாதவ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அலுவலர்கள் உடனிருந்தார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x