Published : 06 Mar 2021 03:15 AM
Last Updated : 06 Mar 2021 03:15 AM

தமிழகத்தில் 5 நாட்களில் - 1 லட்சம் முதியவர்களுக்கு கரோனா தடுப்பூசி :

தமிழகத்தில் 5 நாட்களில் 1 லட்சத்துக்கு மேற்பட்ட முதியவர் கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக சுகாதாரம், காவல், உள்ளாட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவது தொடங்கியது. முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு 28 நாட்கள் நிறைவடைந்தவர்களுக்கு இரண்டாம் தவணையாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கடந்த 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 45 வயது முதல் 59 வயது வரையுள்ள இணை நோய் பாதிப்புள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. தமிழகத்தில் 1,300-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிக்கு ரூ.150 மற்றும் சேவைக் கட்டணம் ரூ.100 என மொத்தம் ரூ.250 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தில் முன்களப் பணியாளர்களைவிட முதியவர்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டுச் செல்கின்றனர். கடந்த 5 நாட்களில் மட்டும் 1,08,886 முதியவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இதேபோல், இணை நோய் பாதிப்புள்ளவர்கள் 61,228 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ‘நான் தடுப்பூசி போட்டுக் கொண்டேன் - நான் பாதுகாப்பாக இருக்கிறேன்’ என்ற விளம்பர மேடையில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். நேற்று சென்னை அரசு பொது மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x