Published : 06 Mar 2021 03:15 AM
Last Updated : 06 Mar 2021 03:15 AM

திருப்பத்தூர் அமமுக பிரமுகர் கொலை வழக்கில் 3 பேரை காவலில் எடுத்து விசாரணை

அமமுக பிரமுகர் கொலை வழக்கில் வேலூர் நீதிமன்றத்தில் சரணடைந்த 3 பேரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

திருப்பத்தூர் கவுதம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அமமுக பிரமுகர் வானவராயன் (30). இவரை, கடந்த மாதம் 15-ம் தேதி மர்ம நபர்கள் கொலை செய்தனர். இந்த வழக்கில் திமுக பிரமுகர் சங்கர் உட்பட 10 பேரை நகர காவல் துறையினர் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த மேலும் சிலரை காவல் துறையினர் தேடி வந்த நிலையில், திருப்பத்தூர் கவுதம்பேட்டையைச் சேர்ந்த நந்தகுமார், அரவிந்தன், பிரபு ஆகிய 3 பேரும் வேலூர் நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சரணடைந்தனர்.

இந்நிலையில், வேலூர் நீதிமன்றத்தில் சரணடைந்த 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என திருப்பத்தூர் நகர காவல் துறையினர் திருப்பத்தூர் ஜேஎம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

அந்த மனு மீது விசாரணை நடத்திய திருப்பத்தூர் நீதிமன்றம் பிரபு, அரவிந்தன், நந்தகுமார் ஆகிய 3 பேரையும் 2 நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அதன்படி 3 பேரை காவலில் எடுத்த நகர காவல் துறையினர் அமமுக பிரமுகர் கொலை வழக்கு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x