Published : 05 Mar 2021 03:15 AM
Last Updated : 05 Mar 2021 03:15 AM
வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விசிக இடம்பெற்றுள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன் விசிக பொதுச்செயலாளர்கள் டி.ரவிகுமார் எம்.பி., சிந்தனைச்செல்வன், பொருளாளர் முகமது யூசுப் ஆகியோர் கடந்த 4 நாள்களாக பேச்சு நடத்தினர்.
விசிக 10 தொகுதிகள் கேட்டு வந்த நிலையில் 4 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று திமுக கூறியதால் இழுபறி நீடித்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்குவது என உடன்பாடு ஏற்பட்டது. நேற்று பகல் 1 மணியளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், விசிக தலைவர் தொல்.திருமாவளவனும் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், விசிக பொதுச்செயலாளர் டி.ரவிகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளிலும் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் என திருமாவளவன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT