Published : 05 Mar 2021 03:16 AM
Last Updated : 05 Mar 2021 03:16 AM

மதுரை, கீழடி உட்பட 8 இடங்களில் - தனித்தன்மை நூலகம் திறக்க வேண்டும் : உயர் நீதிமன்றத்தில் வழக்கு

மதுரை உட்பட 8 இடங்களில் தனித்தன்மை நூலகம் திறக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த வெங்கடேசன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழக சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் கீழடியில் சிந்து நாகரிகம் மற்றும் பழம்பெரும் நாகரிகம் தொடர்பான நூலகம், தஞ்சாவூரில் இசை நாடகம் மற்றும் நுண்கலை நூலகம், மதுரையில் நாட்டுப்புறக் கலைகள் நூலகம், நெல்லையில் தமிழ் மருத்துவம் சார்ந்த நூலகம், நீலகிரியில் பழங்குடியினர் பண்பாடு சார்ந்த நூலகம், திருச்சியில் கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த நூலகம், கோவையில் வானியல் கண்டுபிடிப்புகள் குறித்த நூலகம், சென்னையில் அச்சுக் கலை நூலகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் நூலகம் மற்றும் அருங்காட்சியகம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சட்டப் பேரவையில் அறிவித்தவாறு மதுரை உட்பட 8 இடங்களில் தனித்தன்மை வாய்ந்த நூலகங்கள் திறக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஹேமலதா அமர்வு விசாரித்து, சட்டப் பேரவையில் அரசு அறிவித்தவாறு தமிழகத்தில் தனித்தன்மை வாய்ந்த நூலகம் மற்றும் அருங்காட்சியகங்கள் அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மனு தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை, கலாச்சாரத் துறைச் செயலர்கள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x