Published : 05 Mar 2021 03:18 AM
Last Updated : 05 Mar 2021 03:18 AM

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தேர்தல் பணியில் ஈடுபடும் - 21 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி : துறை ரீதியாக பட்டியல் தயாரிக்க நடவடிக்கை

வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள சுமார் 21 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் கரோனா பரவலை தடுக்கும் வகையில் 1,000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன. அதேபோல், வாக்குச்சாவடி மையங் களில் கரோனா பரவலை தவிர்க்க தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் எடுக்கப் பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அனை வருக்கும் கரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் நடை பெற்று வருகிறது. வாக்குப் பதிவு அலுவலர்கள், கண்காணிப்பு அலுவலர்கள், காவல் துறையினர் என அனைத்து தரப்பினருக்கும் கரோனா தடுப்பூசி போடவுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 11 ஆயிரம் பேர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் என மொத்தம் 21 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

இதற்கிடையில், ராணிப் பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான அனைத்துத் துறை அலுவலர் களுடனான ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பேசும் போது, ‘‘அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் தமது துறையில் இருந்து வாக்குப்பதிவு அலுவலர்களாக பணியாற்றி இருக்கும் நபர்கள் குறித்த விவரங்களை தொகுத்து வழங்க வேண்டும். இதன் அடிப்படையில் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ மனைகள் பட்டியலை தயார் செய்து அளிக்க வேண்டும். இந்தப் பணியை வரும் 12-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். வாக்குப்பதிவு அலுவலர்கள் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்துகொள்ள வேண்டும்’’ என்றார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்ஜெயசந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமா, சார் ஆட்சியர் இளம் பகவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x