Published : 04 Mar 2021 05:52 AM
Last Updated : 04 Mar 2021 05:52 AM

போலி பில் மூலம் : ரூ.44 கோடி வரி ஏய்ப்பு : ஏலக்காய் வியாபாரி கைது :

ஏலக்காய் வர்த்தக நிறுவனம் நடத்தி போலி பில்கள் மூலமாக ரூ.44 கோடி வரை ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்ட நபரை ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்தவர் எம்.ரவிக்குமார் (45). இவர் அதே ஊரில் சொந்தமாக ஏலக்காய் வர்த்தக நிறுவனம் நடத்திவந்தார். போலி பில்கள் தயாரித்து ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் இவர் ஈடுபடுவதாக கோவையில் உள்ள ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் கடந்த 1-ம் தேதி ரவிக்குமாரின் வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்களில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு கோவை சரக அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், ரவிக்குமார் தமிழ்நாடு, கேரளம்,மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், டெல்லிஆகிய மாநில முகவரிகளில் போலியான பதிவுகளை வைத்து நிறுவனங்கள் நடத்தியும், போலி பில்கள் தயாரித்தும் ரூ.44 கோடியே 85 லட்சம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ரவிக்குமாரை விசாரணைக்காக ஜிஎஸ்டி அதிகாரிகள் கோவைஅழைத்து வந்தனர். அவரிடம் 2 நாட்கள்தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. அவர்அளித்த தகவலின் அடிப்படையில் போலிநிறுவனங்களுக்கான ஆவணங்கள், வங்கி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x