Published : 04 Mar 2021 05:53 AM
Last Updated : 04 Mar 2021 05:53 AM

மனைவியை கொன்ற பேராசிரியருக்கு மரண தண்டனை : கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த பேராசிரியருக்கு மரண தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை அண்ணாநகர் 6-வது அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்து வந்தார். இவருக்கும், சேலம் மேட்டூரைச் சேர்ந்த மோகனாம்பாள் என்பவருக்கும் கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். மனைவி வீட்டாரை விட கண்ணனின் குடும்பத்தினர் வசதி குறைந்தவர்கள் என்பதால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி உறங்கிக் கொண்டிருந்த மனைவி மோகனாம்பாளின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டும், கழுத்தை அறுத்தும் கண்ணன் கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக திருமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.ஆர்.வி.ரவி முன்பாக நடந்தது. அரசு தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் வி.முரளிகிருஷ்ணன் வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, “அரசு தரப்பில் குற்றச்சாட்டு சரிவர நிரூபிக்கப்பட்டுள்ளதால், மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக கண்ணனுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அவர் சாகும்வரை தூக்கிலிடப்பட வேண்டும்” என தீர்ப்பளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x