Published : 03 Mar 2021 03:20 AM
Last Updated : 03 Mar 2021 03:20 AM

இலங்கையில்அதானி நிறுவனம் சரக்கு பெட்டக முனையம் அமைக்க அனுமதி இலங்கை அமைச்சரவை ஒப்புதல்

கொழும்பு துறைமுகத்தில் சரக்குப் பெட்டக முனையம் அமைப்பதற்கு இந்திய மற்றும் ஜப்பான் நிறுவனங்களுக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் மேற்கு பகுதியில் சரக்குப் பெட்டக முனையம் (டபிள்யூசிடி) அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டு இலங்கை, இந்தியா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளிடையே முத்தரப்பு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் அடிப்படையில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதியில் சரக்கு பெட்டக முனையம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் துறைமுக ஊழியர்கள் சங்கங்களின் போராட்டம் காரணமாக, இந்திய, ஜப்பான் நிறுவனங்கள் இத்திட்டப் பணியிலிருந்து வெளியேற்றப் பட்டன.

இந்நிலையில் தற்போது மேற்கு பகுதியில் சரக்கு பெட்டக முனையம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கிழக்கு பகுதியில் சரக்குப் பெட்டக முனையம் அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டபோது, இலங்கை துறைமுக ஆணையம் 51 சதவீத பங்குகளை வைத்திருக்கும் என்றும் எஞ்சிய 49 சதவீத முதலீட்டை இந்தியா மற்றும் ஜப்பான் நிறுவனங்கள் முதலீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.

தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள மேற்கு துறைமுக சரக்குப்பெட்டக முனையம் பகுதிக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் 85 சதவீத அளவுக்கு முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய தரப்பில் அதானி நிறுவனம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் தரப்பில் நிறுவனத்தின் பெயர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

கொழும்பு சர்வதேச சரக்கு பெட்டக முனையத்தில் சீனா நிறுவனம் 85 சதவீதம் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டது. அதைப் போல தற்போது இந்திய, ஜப்பான் நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x