Published : 03 Mar 2021 03:20 AM
Last Updated : 03 Mar 2021 03:20 AM
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 கோடி பேரை கொண்ட முதல் கிரிக்கெட் வீரர் எனும் பெருமையை பெற்றார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி.
32 வயதான விராட் கோலி ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இந்த சாதனையை நிகழ்த்திய முதல் நபர் ஆவார்.
ஐசிசி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பாராட்டுச் செய்தியில், "இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பவர்களைக் கொண்ட முதல் கிரிக்கெட் வீரர் விராட் கோலி" எனத் தெரிவித்துள்ளது. இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்தொடரும் 4-வது விளையாட்டு வீரர் விராட் கோலி ஆவார்.
இந்த வகையில் போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி, பிரேசிலின் நெய்மர் முதல் 3 இடங்களில் உள்ளனர். இதில் கிறிஸ்டியானோ ரொனால்டோவை 26.5 கோடி பேரும், மெஸ்ஸியை 18.6 கோடி பேரும், நெய்மரை 14.7 கோடி பேரும் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர்.
இவர்களுக்கு அடுத்தபடியாக ஹாலிவுட் நடிகரும் முன்னாள் மல்யுத்த வீரருமான டுவைன் (தி ராக்) ஜான்சன், அமெரிக்க பாடகர்-பாடலாசிரியர் பியோனஸ் மற்றும் அரியானா கிராண்டே ஆகியோரை தலா 10 கோடி பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர்.
உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படும் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் 27 சதங்களும், ஒருநாள் கிரிக்கெட்டில் 43 சதங்களும் விளாசி உள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் இன்ஸ்டாகிராமில் விராட் கோலியை அதிகம் பேர் தொடர்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT