Published : 03 Mar 2021 03:23 AM
Last Updated : 03 Mar 2021 03:23 AM
புதுடெல்லி: கடந்த 2017-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் உ.பி. மற்றும் பஞ்சாபில், காங்கிரஸின் தேர்தல் ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் பிரஷாந்த் கிஷோர். ஐ-பேக் நிறுவனத்தின் தலைவரான கிஷோருக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர்கள்் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பஞ்சாபில் காங்கிரஸ் தனி மெஜாரிட்டியில் வெற்றி பெற்று கேப்டன் அமரீந்தர் சிங் முதல்வரானார். அப்போது முதல், இருவருக்கும் இடையே நட்பு தொடர்கிறது. இதனால், பஞ்சாபில் 2022-ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலிலும் காங்கிரஸின் ஆலோசகராக பிரஷாந்தை நியமிக்க அம்ரீந்தர் முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில், முன்கூட்டியே அவரை தம் அரசினுள் கொண்டு வந்து பிரஷாந்தை தனது முதன்மை ஆலோசகராக நியமனம் செய்துள்ளார். கேபினட் அமைச்சர் அந்தஸ்து மற்றும் சலுகைகள் பெற்ற இப்பதவிக்காக பிரஷாந்துக்கு மாதம் ஒன்றுக்கு கவுரவ ஊதியமாக வெறும் ரூ.1 மட்டுமே அளிக்கப்படுகிறது. பிரஷாந்துக்கு பஞ்சாபின் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 80-ல் 55 பேர் ஆதரவளித்துள்ளனர். இதற்கான அனுமதியை தனது கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் தனது அமைச்சரவையிடமும் பெற்று முதல்வர் அமரீந்தர் நேற்று அறிவித்துள்ளார். பஞ்சாபில் எதிர்க்கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மிக்கு டெல்லியில் தேர்தல் ஆலோசனை அளித்தவர் பிரஷாந்த் கிஷோர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT